குழந்தை பற்றி குறி கேட்க வந்த இடத்தில் நெருக்கம் ‘இன்ஸ்டாகிராம்’ அழகியை பூசாரி தீர்த்து கட்டியது ஏன்?.. மேலும் பல பெண்களை வசியப்படுத்தியது அம்பலம்


* போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

தாரமங்கலம்: சேலம் அருகே குறி கேட்க வந்த இன்ஸ்டாகிராம் அழகியை கொலை செய்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். அவர் கொலை செய்த காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). கடந்த சில மாதங்களாக பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை செய்துள்ளார். கடந்த 15ம் தேதி செல்வி திடீரென மாயமானார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் பசுவராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே முட்புதரில் செல்வி சடலமாக கிடந்தார்.

விசாரணையில் அவரை பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரி குமார் (42) கொலை செய்து முட்புதரில் வீசியது தெரியவந்தது. பூசாரி குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பசுவராஜ்-செல்வி தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. செல்வி வீட்டில் இருந்தபடி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். விதவிதமான உடைகளில் ஏராளமான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.அவரை 2 ஆயிரம் பேர் வரை பின்தொடர்கின்றனர். 2 குழந்தைகளும் இறந்ததால், வேதனையில் இருந்துள்ளார். அப்போது அப்பகுதியினர் அடுத்த குழந்தையாவது தங்குமா என பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் குறி கேட்கும்படி கூறியுள்ளனர்.

அதனை நம்பி செல்வி சென்றபோது பூசாரி குமார் அவரை வசியப்படுத்தி நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் செல்விக்கு பூசாரி ரூ30 ஆயிரம் கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி செல்விக்கு போன் செய்து பூசாரி குமார் அழைத்துள்ளார். அதன்படி கோயிலுக்கு வந்துள்ளார். தான் கொடுத்த ரூ30 ஆயிரத்தை தரும்படி கேட்டிருக்கிறார். அவர் பணத்தை தர முடியாது என்றதால், நகையை பறிக்க திட்டமிட்டு, குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்துள்ளார். பின்னர், 6 பவுன் செயினை எடுத்துக் கொண்டு, சடலத்தை முட்புதரில் வீசியுள்ளார். நகையை அடகு கடையில் ரூ1.38 லட்சத்திற்கு அடகு வைத்து பணத்தை பெற்றிருக்கிறார், இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்டாகிராம் அழகி செல்வியை கொன்ற பூசாரி குமாருடன் வேறு சில பெண்களும் நெருக்கமாக இருந்துள்ளனர். குறி கேட்டு வரும் பெண்களை தன் வசப்படுத்தி, விரும்பிய இடத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். செல்வியை கொலை செய்த நாளிலும், மற்றொரு பெண்ணை ஏற்காட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post குழந்தை பற்றி குறி கேட்க வந்த இடத்தில் நெருக்கம் ‘இன்ஸ்டாகிராம்’ அழகியை பூசாரி தீர்த்து கட்டியது ஏன்?.. மேலும் பல பெண்களை வசியப்படுத்தியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: