சொத்து குவிப்பு அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (45). இவர் குமரி மாவட்ட பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அயல் பணியாக மீன்வளத்துறையில் தற்போது பணியில் உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் மகேஷ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார், கேசவன்புதூர் பகுதியில் உள்ள மகேஷ் வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். மகேசுக்கு குஞ்சன்விளை, மணிக்கட்டி பொட்டல் உள்பட 8 இடங்களில் சொந்த வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகேஷிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

The post சொத்து குவிப்பு அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: