தஞ்சை: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தேடப்பட்ட பாஜ மாநில நிர்வாகி நேற்றிரவு கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பழவத்தான்கட்டளை ஊராட்சி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் அர்ஜூன் கார்த்தி. இவர் அந்த பகுதியில் சாயி கிரிப்டோ கரன்சி கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்து விட்டதாக நாச்சியார்கோவில் போலீசில் திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்பவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தி ஏமாந்தது தெரியவந்தது.
இதையடுத்து அர்ஜூன் கார்த்தி, கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக வேலை பார்த்த பிரான்சிஸ் மனைவி இவாஞ்சலின் அபிலாதரஸ், நிறுவனத்தின் பார்ட்னரான ராஜா, இவரது மகன் செல்வக்குமார் ஆகியோரை கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் நிறுவனத்தின் பங்குதாரர்களான கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ், பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ள கார்த்திகேயன்(42) ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், கார்த்திகேயனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். கிரிப்டோ கரன்சி ேமாசடி வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான கார்த்திகேயன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாச்சியார்கோவில் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் கார்த்திகேயன் பெயர் உள்ளது. தன் வீட்டுக்கு பின்புறமுள்ள இடத்தை தன் பெயருக்கு இலவசமாக மாற்றித் தரும்படி அந்த இடத்தின் உரிமையாளரை கார்த்திகேயன் மிரட்டியது தொடர்பாக கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: பாஜ மாநில நிர்வாகி அதிரடி கைது appeared first on Dinakaran.
