உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி

 

விருதுநகர், அக்.7: விருதுநகர் அருகே எம்.ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவர் மயிலாடுதுறையில் செயல்படும் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் குழுவில் இருந்து உளுந்து, பயறு விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகிறார். விருதுநகரை சேர்ந்த சாரதி, தனது நிறுவனத்திற்கு ரூ.23.52 லட்சத்திற்கு உளுந்து, பயறு வாங்கி, ரூ.17.36 லட்சம் கொடுத்துள்ளார். மீதிப்பணம் ரூ.6.16 லட்சத்தை கொடுக்காமல் கடந்த 7 மாதங்களாக ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் ரூ.7.62 லட்சத்திற்கு உளுந்து வாங்கி ரூ.5.08 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகை ரூ.2.54 லட்சம் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிகிறது. இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று கொடுத்தால் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிடுவேன் என கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காளிராஜ் மனு தெரிவித்துள்ளார்.

The post உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: