புதிய சாலை அமைப்பதற்காக ரத வீதிகளில் மேயர் திடீர் ஆய்வு

சிவகாசி, செப்.28: சிவகாசி ரதவீதிகளில் மாகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகாசி மாநகராட்சியில் சிவகாசி நகராட்சி நூற்றாண்டு நிதியில் ரூ.50 கோடியில் 28.53 கிலோ மீட்டர் தூரமுள்ள 48 சாலைகள் அமைக்கவும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 6.59 கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.8 கோடியும், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரத வீதிகள் உட்பட 10.45 கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.16 கோடியும், நகர சாலை மேம்பாட்டு திட்டத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக சிவகாசி மாநகராட்சியில் உள்ள முக்கியமான சாலைகளான காந்தி ரோடு, மணிநகர் பஸ் ஸ்டாப், ஏவிடி பள்ளிக்கூட சாலை, ராணி அண்ணா காலனி வரை மின்விளக்குகள் அமைத்து, தார்சாலை அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாக நடைபெறும் இந்த பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிவகாசி ரதவீதிகள், போலீஸ் ஸ்டேசன் ரோடு உட்பட சில பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாததால் சாலை பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலை அமைக்கும் விதமாக ரதவீதிகளில் மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரதவீதிகளில் உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், பொறியாளர்கள் சாகுல்ஹமீது, ரமேஷ் உடனிருந்தனர்.

The post புதிய சாலை அமைப்பதற்காக ரத வீதிகளில் மேயர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: