தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு லேசான மழை

சென்னை: ‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. சில இடங்களில் வெப்பம் குறைந்து காணப்பட்டாலும், பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் 4 நாட்களுக்கு பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

The post தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு லேசான மழை appeared first on Dinakaran.

Related Stories: