திருச்சி, ஆக. 30: திருச்சியில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ரங்கம் அம்மாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் திருமுருகன்(43). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம்தேதி இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி செல்லும் டவுன் பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டு 4 வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்களை மேலே ஏறும்படி திருமுருகன் கூறியுள்ளார். ஆனால் மேலே ஏற மறுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி 4 பேரையும் மேலே ஏறும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் கீழே கிடந்த டைல்ஸ் கல்லால் டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டிரைவர் திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.