கொளந்தானூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டும்

 

கரூர், ஆக. 29: கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில் வழங்கிய மனுவில், கரூர் கொளந்தானூர் அடுக்குமாடி மக்கள் நல்வாழ்வு நல சங்கத்தினர் வழங்கிய மனுவில், நாங்கள் அனைவரும் அருந்ததியர் பிரிவை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் 112 வீடுகள் கட்டிக்கொடுத்து குடியிருந்து வந்தோம்.

இந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்த காரணத்தினால் அனைத்து குடும்பங்களையும் கடந்தாண்டு செப்டம்பர் 10ம் தேதியன்று வெளியேற்றி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்தனர். இடத்தை காலி செய்து ஓராண்டு ஆன நிலையில் வீடு கட்டுவதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், வீடு கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறுகின்றனர். நாங்கள் அனைவரும் வேறு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு வீடு கட்டித் தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கொளந்தானூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: