செய்யாறு அருகே அதிகாலை விபத்து: தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 22 தொழிலாளர்கள் படுகாயம்

செய்யாறு: செய்யாறு அருகே இன்று அதிகாலை தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்தது. இதில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மட்டதாரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (28). சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியின் பஸ் டிரைவராக உள்ளார். இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் கலவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள ராந்தம், அசனமாபேட்டை, பெருங்கட்டூர், கொடையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனிக்கு சென்றார். பஸ்சில் 40 தொழிலாளர்கள் இருந்தனர்.

கலவை-காஞ்சிபுரம் சாலை கொடையம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பஸ்சில் இருந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 22 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post செய்யாறு அருகே அதிகாலை விபத்து: தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 22 தொழிலாளர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: