வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் திரளானோர் பங்கேற்பு

பணகுடி,ஆக.7: நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் உள்ள பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயமானது கடந்த 1715, 1716ம் ஆண்டுகளில் வீரமாமுனிவர் மறைபணியாற்றிய தலமாகும். கடந்த 1926ம் ஆண்டு ரோச் ஆண்டகையால் சின்ன ரோமாபுரி என பிரகனப்படுத்தப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆலய திருவிழா நடைபெறும். இதன்படி 326ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று காலை 3 திருப்பலிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறை வட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமை வகித்தார். இதையடுத்து பங்குத்தந்தை மார்ட்டின் கொடியை அர்ச்சித்து ஏற்றினார். தொடர்ந்து மறையுறை, நற்கருணை ஆசீர் நடந்தது. கொடியேற்ற விழாவில் தென்மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ், அழகப்பபுரம் பங்குத்தந்தை செல்வ ராயர், சேவியர்புரம் பங்குத்தந்தை சூசை மணி, நொச்சிகுளம் பங்குத்தந்தை ஜோசப் ரத்தினராஜ் மற்றும் ரோசாரியோ சபை அருட்தந்தையர்கள், ஜெபமாலை மாதா அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.திருவிழா நாட்களில் தினமும் மறையுறை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடக்கின்றன. 9ம் நாளான வரும் 14ம் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 10ம் நாள் காலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடைபெறும். மாலை அன்னையின் தேர்ப்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.கொடியேற்ற நிகழ்ச்சியில் வடக்கன்குளம் பஞ். தலைவர் ஜான் கென்னடி, திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் கிரகாம் பெல், பாலகிருஷ்ணா பள்ளித் தாளாளர் திவாகரன், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், வடக்கன்குளம் பஞ். துணைத்தலைவர் பாக்கியசெல்வி குமரன், கவுன்சிலர்கள் அமிர்தராஜ், ஆனந்தி, தாஸ், ஆசைத்தம்பி, அகிலாதேவி, சரோஜினி, தங்கம், சுரேஷ், பொன்பாண்டி, பிரின்ஸ்,கோகிலம், ஊராட்சி செயலர் அசிர் ஜெபராஜ் மற்றும் ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பங்குத்தந்தை மார்ட்டின் உதவி பங்குத்தந்தை சவரி ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

The post வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: