குழந்தை உயிரிழந்த விவகாரம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம்

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றரை வயது முகமது மகிர், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. மூளையில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. குறைவாக எடை, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, வளர்திறன் குறைபாடு என்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த விபி ஷன்ட் ஆசனவாய் வழியாக வெளியேறிய காரணத்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை பிறகு குழந்தையின் வலது கைக்கு ரத்த விநியோகம் குறைந்தது, குழந்தைக்கு தமனிகளில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது, பரிசோதனையில் குழந்தைக்கு சூடோமோனாஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக குழந்தையின் கை கடந்த மாதம் 7 தேதி அகற்றப்பட்டது. அதற்கு பிறகு அனைத்து மருத்துவர்களும் தீவிரமாக குழந்தையை கண்காணித்து வந்தனர். குழந்தைக்கு சூடோமோனாஸ் தொற்று தொடர்ந்து இருந்தது.

இதற்கு ரிவிஷன் ஷன்ட், செயற்கை சுவாசம் போன்ற உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழுவினரின் ஆலோசனையை குழந்தையின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். மருத்துவமனையில் தங்கியிருந்த காலம் முழுவதும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் குழுவினர் மற்றும் நிர்வாகிகளால் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வந்த போதிலும், குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று காலை 5.42 மணிக்கு உயிரிழந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post குழந்தை உயிரிழந்த விவகாரம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: