செங்குன்றம் அருகே தனியார் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது

புழல்: தனியார் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு காந்திநகர் சேர்ந்தவர் லோகு(23). தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், லோகுவை கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்துகொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வழிப்பறி ஆசாமிகளான சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கங்கா கணேஷ்(19), பெரம்பூரை சேர்ந்த அமர்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பைக் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்குன்றம் அருகே தனியார் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: