கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பழைய கட்டணம் அமல்

 

கொடைக்கானல், ஆக.4: கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் முக்கியமான சுற்றுலா இடமாக உள்ளது பேரிஜம் ஏரி. இந்தப் பகுதியில் தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரியின் கழுகு பார்வை பகுதி, பேரிஜம் ஏரி ஆகிய இடங்கள் உள்ளன. இந்த பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்கு வன துறை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. காருக்கு 200 ரூபாயும், வேன் ஒன்றுக்கு 300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலராக யோகேஷ் குமார் மீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இவர் பொறுப்பேற்றவுடன் தற்போது கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்வதற்கு கார் ஒன்றுக்கு 300 ரூபாய் கட்டணமும் வேன் ஒன்றுக்கு 600 ரூபாய் கட்டணமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த திடீர் கட்டண உயர்விற்கு கொடைக்கானல் சுற்றுலா டாக்சி வேன் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் பழைய கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முதல் பழைய கட்டண நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து பழைய கட்டண முறை நடைமுறைப்படுத்திய வனத்துறைக்கு சுற்றுலா டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

The post கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பழைய கட்டணம் அமல் appeared first on Dinakaran.

Related Stories: