வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை நியமன விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை நியமன விழா மற்றும் ராஜஸ்தான் புத்தக வங்கியில் புத்தகம் வழங்கும் விழா நேற்று‌ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், முதன்மை விருந்தினராக சிவராஜ் சோசியல் டிரஸ்ட்டின் நிர்வாக மேலாளர்‌ ரஞ்சித் காந்திலால் ஜெயின் கலந்துகொண்டார். பின்னர், அவர் பேசுகையில்,‘‘கடின உழைப்பால் மட்டுமே தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைப் பண்புகளை நாம் நன்கு கற்றுணர்ந்து அதன்படி நாம் செயலாற்ற வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை நாம் நல் வாய்ப்பாக்கி கொண்டு வாழ்வில் நன்மையடைய வேண்டும்.’’ என்று கூறினார்.

தொடர்ந்து முன்னாள் மாணவியர் பேரவை உறுப்பினர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேரவையின் துணை பொறுப்பாளர் சாந்தலட்சுமி புதிய மாணவர் பேரவைக்காக தேர்வான மாணவியர்களை அறிமுகப்படுத்தினார்.
பின்பு, மாணவியர் பேரவை தலைவியாக அனிஷ்பாத்திமா, துணை பேரவை தலைவியாக அபிநயா, பொருளாளராக ரேவதி, துணை பொருளாளராக பெல்சி, செயலாளராக உஷா, துணை செயலாளராக சங்கே லாஜோ பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பேரவையின் துணைபொறுப்பாளர் உறுதிமொழி கூற பொறுப்பேற்றவர்கள் வழிமொழிந்தனர். கல்லூரியில் சிறப்பாக செயலாற்றுகின்ற குழுக்கள் பற்றிய காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது.இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இராஜஸ்தான் புத்தக வங்கி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவிகள் 300 பேருக்கு புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விழாவில் ஆர்.ஓய்.ஏ தலைவர் ஷ்ரேயன்ஸ்சேத்தியா பேசுகையில், ‘புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும்’’ என்றார். இந்நிகழ்வில் கௌரவ‌ விருந்தினர்களாக ஆர்.ஓய்.ஏ. நிர்வாகி ராஜேஷ் குமார் ஜெயின், ஆர்.ஓய்.ஏ செங்கல்பட்டின்‌ தலைவர் மகாவீர் சி.ஜெயின் வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ்சுரானா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா, கல்லூரி முதல்வர் முனைவர் அருணாதேவி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை நியமன விழா appeared first on Dinakaran.

Related Stories: