செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3,000 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு ஏலம்

செம்பனாகோயில், ஜூலை25: செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3,000 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு ஏலம் சென்றது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள், தங்களது வயலில் சாகுபடி செய்த பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயிகளின் நலன் கருதி நாகை விற்பனை குழுவின் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்காணிப்பாளர் சங்கர்ராஜா முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,278-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,845-க்கும் சராசரி விலையாக ரூ.6,755-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமார் 3,000 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த ஏலத்தில் 983 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

The post செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3,000 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: