சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம்

ஏரல், ஜூலை 23: சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று (22ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை புனிதநீர் எடுத்து வருதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.

இதையொட்டி சுவாமி- அம்பாள் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிறுத்தொண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். திருவிழா நாட்களில் தினமும் காலை யாகவேள்வி, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு கோமதி அம்மாளுக்கு மஹா தீபாராதனை நடக்கிறது. விழாவின் சிகரமான ஆடித்தபசு வைபவம் வரும் 31ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தான சுவாமி- அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், யாக வேள்வி, தீபாராதனை, காலை 6 மணிக்கு அம்பாள் தபசுக்கு புறப்படுதல், 8.30 மணிக்கு தாமிரபரணி நதியில் இருந்து பால்குடம் ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு கோயிலை ஊர்வலம் வந்தடைந்ததும் சிறப்பு அபிஷேகம், அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு 12.55 மணிக்கு மேல் சங்கரநாராயணர்  சங்கரேஸ்வரராக அம்பாளுக்கும் காட்சியளித்தல் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஆக. 1ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை  சங்கரேஸ்வரர்-  கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளியதும் நகரில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

The post சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: