ஹாமில்டன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் ஜப்பான் 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் இந்த தொடரில், ஹாமில்டனில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜாம்பியா – ஜப்பான் அணிகள் மோதின. ஜாம்பியா வீராங்கனைகள் தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால், முதல் பாதியில் ஜப்பானால் கோலடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு வியூகத்தை மாற்றி பல்முனை தாக்குதலை மேற்கொண்ட ஜப்பான் அணி கோல் மழை பொழிந்தது.
அந்த அணி வீராங்கனைகள் மினா டனகா (49வது, 55வது நிமிடம்), ஹினடா மியாசவா (62வது நிமிடம்), ஜுன் எண்டோ (71வது நிமிடம்), ரிகோ உயிகி (90+12வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் ஜப்பான் 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஆக்லாந்தில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்ககா 3-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தியது. அமெரிக்க தரப்பில் ஷோபியா ஸ்மித் 2 (14வது நிமிடம், 45+7வது நிமிடம்), லிண்ட்சே ஹோரன் ஒரு கோல் (77வது நிமிடம்) அடித்தனர்.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: ஜப்பான் கோல் மழை appeared first on Dinakaran.