மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவேலம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சித்தாலமங்கலம் கிராமத்தில் இருந்து கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு, 11 மாணவர்கள், ஒரு ஆசிரியர் உட்பட 12 பேர் ஆட்டோவில் நேற்று காலை பயணம் செய்தனர்.
இந்த ஆட்டோ மேலவலம்பேட்டை என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், திடீரென ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பள்ளி மாணவ, மாணவிகள், ஒரு ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 13 பேர் சிறிய காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆட்டோ மீது கார் மோதி விபத்து 11 பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேர் காயம்: மதுராந்தகம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
