டெல்லி சேவைகள் விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லுமா?: தலைமை நீதிபதி கேள்வி

புதுடெல்லி: டெல்லி சேவைகள் விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லுமா என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் தொடர்பாக கவர்னர் மற்றும் ஆம்ஆத்மி அரசு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் மே 19ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆம்ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் இந்த சிக்கலை தீர்க்க வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற ஆலோசித்து வருவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ஒன்றிய அரசு செய்தது என்னவென்றால், 239ஏஏ(7) இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி, டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் அரசியலமைப்பைத் திருத்தியுள்ளனர். இது அனுமதிக்கப்படுமா?. இதுதொடர்பாக அரசியல் சாசன அமர்வுகள் வழங்கிய தீர்ப்புகள் எதுவும் இல்லை என்று நான் நினைக்கவில்லை. எனவே ஒன்றிய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலாம்’ என்று தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தார்.

The post டெல்லி சேவைகள் விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லுமா?: தலைமை நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: