கோவையில் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 5 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தனியார் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 5 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மதுக்கரை ரோட்டில் ஒரு தனியார் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வளாகத்திலேயே பொறியியல் கல்லூரி மற்றும் விடுதிகள் இயங்கி வருகின்றன. கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே அமைந்துள்ள பகுதியில் காம்பவுண்டு சுவர் ஒன்று உள்ளது. இந்த காம்பவுண்ட் சுவர் ஒட்டியே புதிய காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகளில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலை 5.30 மணி அளவில் காம்பவுண்டின் அஸ்திவாரம் வலுவிழந்து இடிந்து கீழே விழுந்தது.

இதில், ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (53), நக்கிலா சட்யம் (48), ரப்பாகா கண்னையா (49) மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த பிஸ் கோஸ் (43) ஆகிய 4 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த வருன் கோஸ் (44) மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குனியமுத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட வருன் கோஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஒப்பந்ததாரர் சீனிவாசன் , திட்ட மேலாளர் சாதிக் குல் அமீர், பொறியாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 5 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: