கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருநெல்வேலி எம்பிக்கு நோட்டீஸ்: திமுக பொது செயலாளர் துரைமுருகன் அனுப்பினார்

சென்னை: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஞான திரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பி சா.ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில்-செயல்படுவதாகவும் தலைமை கழகத்திற்கு புகார் வரப்பெற்றுள்ளது.

அவரது இச்செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும் பட்சத்தில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் ஞானதிரவியம் எம்.பி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திருச்சபையின் யோவான் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஞான திரவியம் நீக்கப்பட்டார். புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஞானதிரவியம், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் ஞான திரவியம் எம்பிக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோதல் தொடர்பாக ஞான திரவியம் எம்.பி., நெல்லை திருமண்டல பொருளாளர் ஏடிஜேசி தினகர், நிர்வாகி மைக்கேல், வக்கீல் ஜான் உள்ளிட்ட 12 பேர் மீது பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வக்கீல் ஜான் கைது செய்யப்பட்டார்.

The post கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருநெல்வேலி எம்பிக்கு நோட்டீஸ்: திமுக பொது செயலாளர் துரைமுருகன் அனுப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: