தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது: நகராட்சி நிர்வாகத்துறை..!

சென்னை: அனுமதியின்றி விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2022ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35ன் படி திருத்தப்பட்ட 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படியும், விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 13.04.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117–0ன்படி அகற்றப்படவேண்டும். அதேபோல, உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-Pன் படி அகற்றப்பட வேண்டும். மேற்படி பிரிவுகள் 117-0, 117-P ஆகியவற்றின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றிவிடும். பின்பு, அதற்கான செலவினம் பிரிவுகள் 117-0, 117-P மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடமிருந்து அல்லது தனி நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25,000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விதிகள் 322, 341ல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், போர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும், உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது: நகராட்சி நிர்வாகத்துறை..! appeared first on Dinakaran.

Related Stories: