முதலில் பேட்டிங் செய்திருக்கவேண்டும்; அஸ்வினை வெளியே உட்கார வைத்தது தவறு: தாதா கங்குலி காட்டம்

மும்பை: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன் குவித்துள்ளது. பிட்ச் துவக்கத்தில் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனக் கருதப்பட்டது. இதற்கு ஏற்றாற்போல், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் ஜடேஜாவுடன் இந்தியா களமிறங்கியது. ஜடேஜாவை சேர்த்துவிட்டு, உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருக்க கூடிய ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்கவில்லை.

இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்றும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி, 500+ ரன்களுக்கு மேல் எடுக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு கடும் அழுத்தம் ஏற்படும். அதுவும், ஆஸ்திரேலிய அணியில் இருக்க கூடிய ஹேசில்வுட், ஸ்டார்க், போலாந்த், பாட் கம்மின்ஸ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் உலகத்தரத்தில் இருப்பதால், இந்திய அணி கடும் அழுத்தங்களுடன்தான் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:- டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்க கூடாது.

அந்த முடிவு எப்போதுமே எனக்கு பிடிக்காது. இது ஒரேயொரு போட்டி என்பதால்தான், ரோகித் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார் என நினைக்கிறேன். கடைசியாக, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, இந்திய அணி டாஸ் வென்று டெஸ்டை வென்றிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது’’ அப்போது இந்தியா 190 ரன்களுக்கு அவுட் ஆனாலும், 5வது நாளில் போட்டியை வென்றார்கள். ஒருவேளை, இது தொடராக இருந்தால், ரோகித் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருப்பார். முதலில் பந்துவீசுவதால், இந்திய அணிக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

ஆஸ்திரேலியா பெரிய ரன்களை அடித்துவிட்டால், இந்திய அணிக்கு தான் கடும் அழுத்தம் ஏற்படும். மேலும் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக அவர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வெற்றிபெற்றுள்ளனர். ஆனால், நீங்கள் என்னை கேட்டால் கேப்டனாக நான் வேறு மாதிரி நினைப்பேன். நானாக இருந்திருந்தால், அஸ்வின் போன்ற உலகத்தரமிக்க பவுலருக்கு நிச்சயம் ஆடும் லெவன் அணியில் இடம் கொடுத்திருப்பேன். அவரை வெளியே உட்கார வைப்பது பற்றி யோசித்திருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதலில் பேட்டிங் செய்திருக்கவேண்டும்; அஸ்வினை வெளியே உட்கார வைத்தது தவறு: தாதா கங்குலி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: