‘நூறு ஆண்டு காலம் வாழ்க…’ 98 வயது மூதாட்டிக்கு ‘பர்த்டே’ 105 வயது சகோதரி வாழ்த்தினார்.! 4 தலைமுறையினர் பங்கேற்று வாழ்த்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டி தனது பிறந்தநாளை நான்கு தலைமுறையினருடன் உற்சாகமாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் 105 வயதான இவரது சகோதயும் பங்கேற்று வாழ்த்தினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி வேலாயி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ராசு தனது 93வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து வேலாயி மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வேலாயி பாட்டிக்கு 98 வயது பிறந்தநாள். வாழ்வில் சதம் அடிக்க இன்னும் ஈராண்டுகள் இருக்கும் நிலையில், பாட்டியின் பிறந்தநாளை இந்தாண்டு கோலாகலமாக கொண்டாட அவரது பேரன், பேத்திகள் முடிவு எடுத்தனர். இதனை நான்கு தலைமுறை கொண்ட அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கூடக்கோவில் கிராமத்தில் உள்ள வேலாயி இல்லத்தில், அவரது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகன்கள், மருமகள்கள், மகள்கள் மருமகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், பேத்திகள் என அனைவருடன் இணைந்து வேலாயி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். கிராம மக்களும் வேலாயிக்கு வாழ்த்துகளை தெரிவித்து ஆசி பெற்று சென்றனர். இதில் சிறப்பம்சமாக வேலாயி பாட்டியின் 105 வயது அக்கா கருப்பாயியும் இந்த விழாவில் பங்கேற்று, தங்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 2 மூதாட்டிகளுடன் அமர்ந்து அவர்களது குடும்பத்தினர் குரூப் போட்டோக்கள் எடுத்து கொண்டனர். வேலாயி பாட்டி சதமடித்து நீண்ட ஆண்டுகள் வாழ வேண்டுமென கிராம மக்கள் தெரிவித்தனர்.

The post ‘நூறு ஆண்டு காலம் வாழ்க…’ 98 வயது மூதாட்டிக்கு ‘பர்த்டே’ 105 வயது சகோதரி வாழ்த்தினார்.! 4 தலைமுறையினர் பங்கேற்று வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: