தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது தமிழகம்: அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.. ஒரகடத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடியில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர் நலத்துறை, தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைத்துள்ளது. காஞ்சிபுரம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்,

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி:

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரசேகரனை மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது:

தமிழ்நாடு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்ட ஒரு மாநிலம். அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. மின்னணு வாகனங்கள், தோல் சார்ந்த காலணி, வங்கி, நிதி, காப்பீடு மற்றும் சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் முன்னணியில் உள்ளது. ஆடைகள் உற்பத்தி, ரசாயன உற்பத்தி ஆகிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னிலை:

வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022-23-ல் நிறுவனங்கள் எண்ணிக்கை 7,33,296-ஆக உயர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கடந்த ஓராண்டில் 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

47,14,148 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன:

47,14,148 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். ஐடிஐ மாணவர்களுக்கு உலகத்தர பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,400 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைய உள்ளனர். எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாக கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

டாடாவிற்கு நன்றி:

தமிழ்நாட்டில் தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் டாடாவிற்கு நன்றி என்றும் முதல்வர் கூறினார். நவீன பயிற்சி கூடங்களில் பணிபுரிவோர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது தமிழகம்: அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.. ஒரகடத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Related Stories: