தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை: மின்சார வாரியம் தகவல்

சென்னை: நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் தமிழக வரலாற்றில் 10 மாதங்களில் 2வது முறையாக மின்கட்டணம் உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை, மீண்டும் மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஜூலை முதல் கட்டண உயர்வு முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து மின்கட்டணத்தை 6 சதவீதம் அல்லது மின்வாரியத்தின் பணவீக்கம் 4.7 சதவீதத்திற்கு உயர்திக்கொள்ளலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை: மின்சார வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: