ஆப்கானிஸ்தானுடன் 2வது ஒருநாள் 132 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

அம்பாந்தோட்டை: ஆப்கானிஸ்தான் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 132 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், 2வது போட்டி ராஜபக்ச சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன் குவித்தது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 78 ரன் விளாசினார். நிசங்கா 43, கருணரத்னே 52, சமரவிக்ரம 44, தனஞ்ஜெயா 29*, தசுன் ஷனகா 23, ஹசரங்கா 29* ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பரீத் அகமது, முகமது நபி தலா 2 விக்கெட், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 324 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 42.1 ஓவரில் 191 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஸத்ரன் 54, ரகமத் ஷா 36, கேப்டன் ஹஷ்மதுல்லா 57, அஸ்மதுலா உமர்ஸாய் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இலங்கை பந்துவீச்சில் தனஞ்ஜெயா, ஹசரங்கா தலா 3 விக்கெட், சமீரா 2, தீக்‌ஷனா, ஷனகா தலா 1 விக்கெட் எடுத்தனர். தனஞ்ஜெயா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post ஆப்கானிஸ்தானுடன் 2வது ஒருநாள் 132 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: