இன்ஜினியரிங் படிக்க 2.28 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டடை 17 ஆயிரம் பேர் கூடுதல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இது கடந்த ஆண்டை விட 17 ஆயிரம் பேர் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். போன்ற இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை கடந்த மாதம் (மே) 5ம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவு பெற்று இருக்கிறது.

விண்ணப்பப் பதிவை பொறுத்தவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 பேர் மேற்கொண்டு இருப்பதாகவும், அதில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 728 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விண்ணப்பக் கட்டணத்தை இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில் தற்போதையை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைவிட 17 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பப்பதிவு மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு நேற்று இரவு 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கப்படுகிறது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20ம் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 26ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 2ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின்னர், பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் அடுத்ததாக ஆகஸ்டு மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் துணை கலந்தாய்வில் நிரப்பப்படும். தொடர்ந்து எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி.க்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அன்றைய தினத்துடன் இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

The post இன்ஜினியரிங் படிக்க 2.28 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டடை 17 ஆயிரம் பேர் கூடுதல் appeared first on Dinakaran.

Related Stories: