பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாஜ எம்பியை கைது செய்யக்கோரி தபால் நிலையங்கள் முற்றுகை: பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாஜ எம்பியை கைது செய்யக்கோரி தபால் நிலையங்களை முற்றுகையிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டபட்டுள்ள பாஜ எம்.பியை கைது செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு தபால் அனுப்ப, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன் கூடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தபால் நிலையம் முன் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்குள் செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை: தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை தபால் நிலையத்திற்குள் செல்லாதவாறு போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசார்-போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாஜ எம்பியை கைது செய்யக்கோரி தபால் நிலையங்கள் முற்றுகை: பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.

Related Stories: