கண்ணூரில் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு வடமாநில வாலிபரிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிடிபட்ட வட மாநில வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு நேற்று முன் தினம் அதிகாலை தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே ரயிலில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் வழியில் கோழிக்கோடு அருகே வைத்து பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடந்தது. இந்தநிலையில் அதே ரயிலுக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டு உள்ளது.

ஆகவே இந்த 2 சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் நேற்று முன் தினம் நடந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாகவும் என்ஐஏ உள்பட மத்திய உளவுத்துறை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த புஷன்ஜித் சித்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் ரயில்வே போலீசாரும், கண்ணூர் போலீசாரும், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தான் பிச்சை எடுப்பதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும்போது போலீசார் தன்னை விரட்டியடித்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாகவும் இவர் போலீசிடம் கூறியுள்ளார்.

The post கண்ணூரில் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு வடமாநில வாலிபரிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: