மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை கண்டித்து வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை கண்டித்து, வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், உத்திரமேரூர் மற்றும் எடையம்புதூர் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில், சில விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க உத்திரமேரூர் கிளை காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரை செய்த பல்வேறு காரணங்களை காட்டி வங்கி மேலாளர் மாலதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன்களை வழங்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், உத்திரமேரூர் கிளை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு, வங்கி மேலாளரை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், கோதண்டராமன், பொருளாளர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன்கள் அனைத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும், விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் காலதாமதம் செய்யும் உத்திரமேரூர் கிளை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உத்திரமேரூர் பொறுப்பாளர் கண்ணப்பன், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள், சங்க ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன முழுக்கமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை கண்டித்து வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: