போலீஸ்காரர் பலியான விபத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு

தேன்கனிக்கோட்டை, ஜூன் 1: மத்திகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் கணேசன்(58). இவர் நேற்று முன்தினம், கெலமங்கலம் காவல் நிலைய குற்ற வழக்கில், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து விட்டு ஓசூர் நோக்கி தனது டூவீலரில் சென்றார். பாரந்தூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த நபர், கணேசனின் டூவீலரை முந்த முயன்றபோது, அவரது டூவீலர் மீது மோதியதில் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கெலமங்கலம் போலீசார், கணேசனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய நபர் குறித்து விசாரித்ததில், அவர் தேன்கனிக்கோட்டை அடுத்த பெலகேரி கிராமத்தைச் சேர்ந்த நாராயண ரெட்டி மகன் தினகரன்(38) என்பதும், இவருக்கும் விபத்தில் காயங்கள் ஏற்பட்டதால், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post போலீஸ்காரர் பலியான விபத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: