அரசு விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜூன் 1: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் திருவள்ளுர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கென 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு 23ம், மாணவியர்களுக்கு 10ம், கல்லூரி மாணவர்களுக்கு 1 விடுதியும் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர், மாணவியர்கள், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும்போது கல்லூரி விடுதியில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் 15ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

The post அரசு விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: