மூணாறு பகுதிகளில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்: யானைகள் சரணாலயத்தில் விட கோரிக்கை

மூணாறு: மூணாறு பகுதிகளில் படையப்பா உள்ளிட்ட காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு, கார், ரேஷன் கடைகளை அடித்து நொறுக்கி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும்.இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இதனால் மூணாறு எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.சாந்தன்பாறை, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுற்றித்திரியும் 5 காட்டு கொம்பன் யானைகள் தான் அதிக தாக்குதல் குணம் உடையவை. படையப்பா, அரிசி கொம்பன்,கணேசன்,முறிவாலன்,ஓஸ் கொம்பன் என்ற பெயர்களில் இந்த காட்டு கொம்பன் யானைகள் அழைக்கப்படுகின்றன.

பாடாய்ப்படுத்தும் படையப்பா
மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு தனியார் தேயிலை எஸ்டேட் கம்பெனிக்கு உட்பட்ட கிரகாம்ஸ்லண்ட் பகுதியில் நுழைந்த படையப்பா யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த தேயிலைத்தூள் மூட்டைகளை வெளியே எடுத்து எரிந்து சேதப்படுத்தியது. இதில் 300 கிலோ தேயிலை தூள் சேதமடைந்ததாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு மாட்டுபட்டியில் படகு சவாரி மையம் அருகே சாலையில் வலம் வந்த படையப்பா யானை, அங்கிருந்த ஜான்சன், சுகன் ஆகியோரின் கடைகளை அடித்து நொறுக்கியது. மேலும் அன்னாசி பழம், மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று தீர்த்தது.

மேலும், அந்த யானை நள்ளிரவில் மாட்டுபட்டி எஸ்டேட் நெற்றிமேடு டிவிஷனில் வீட்டின் முன் நிறத்தியிருந்த ராமன் என்பவருக்குச் சொந்தமான காரை சேதப்படுத்தியது. மேலும் சின்னக்கானல், சாந்தன் பாறை, ஆணையிரங்கள், பூப்பாறை போன்ற பகுதிகளில் அரிசி கொம்பன், கணேசன், முறிவாலன் என்ற பெயரில் அழைக்கப்படும் காட்டு யானைகள் நிரந்தரம் தொழிலாளர்களுக்கு பிரச்சனையாக மாறியுள்ளன. அப்பகுதியில் ஏராளமான வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சாந்தன் பாறையில் உள்ள ஒரு ரேஷன் கடையை ஒரு வாரத்தில் மட்டும் ஆறு முறை உடைத்து அரிசி உட்பட உள்ள பொருட்களை தின்று தீர்த்துள்ளது. இப்பகுதியில் பகல் நேரங்களில் சுற்றித்திரியும் யானைகளால் ஏலத்தோட்டத்திற்கு ஆட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பல தோட்டங்களும் அடைத்து பூட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி, மக்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், நிலைமை மாறாமல் தொடர்ந்து வருகிறது. ஆனால் வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு மற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்னைக்குரிய 5 கொம்பன் யானைகளை பிடித்து வயநாடு, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக உள்ளஐ தனியாக சுற்றித்திரியும் இந்த காட்டு யானைகள் பொதுமக்களுக்கு ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியை விட்டு வெளியேறாமல் சுற்றித்திரியும் இந்த கொம்பன் யானைகள் சுற்றுலாத் துறைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

அடிக்கடி குடியிருப்புக்குள் நுழைகிறது
கேரள மாநிலம், மூணா றை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்குள் யானைகளும் சுற்றித் திரிவதால் மக்கள் வெளியே தலைகாட்ட அச்சமடைகின்றனர். இப்பகுதியில் உள்ள தலையார் எஸ்டேட்டில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை அப்பகுதியில் இருந்த வாழை உட்பட விவசாய பயிர்களை நாசம் செய்தது. இதனால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர். பின் வனப்பகுதிக்குள் சென்றது.அதுபோல் குண்டளை எக்கோ பாயின்ட் அருகே சாலையில் இறங்கிய யானை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

பின் சாலையோர கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கியது. இதனால் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதே சமயம் சாலையில் நிற்கும் யானையை, வாகனங்களில் பின் தொடர்ந்து வீடியோ எடுப்பது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எறிவது, வாகனத்தின் ஹார்ன் சத்தத்தை அதிகளவில் எழுப்புவது போன்ற செயல்களை சுற்றுலாப்பயணிகள் செய்யக்கூடாது என வன அலுவலர்கள் கூறியுள்ளனர்.

ரேஷன் கடைகளுக்கு குறி
மூணாறில் தொழிலாளர்கள் வசிக்கும் எஸ்டேட் பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. சின்னக்கானல் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து விற்பனைக்கு வைத்திருந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை தின்று தீர்த்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர். கடந்த ஓராண்டில் இங்குள்ள கன்னிமலை, நயமக்காடு, கடலார், நல்லதண்ணி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ரேஷன் கடைகளை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மூணாறு பகுதிகளில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்: யானைகள் சரணாலயத்தில் விட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: