விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்தனர் திருச்செந்தூர் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும்.இந்நிலையில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் உற்சாகமாக புனித நீராடி, நாழிகிணறு தீர்த்தத்தில் குளித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடந்தன.

கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லக்கூடிய கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி, வயோதிகர்கள் செல்லும் வழி என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி கடற்கரை, நாழிகிணறு, கோயில் வளாகம், ரதவீதிகள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். ரதவீதிகளில் பக்தர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று அவற்றை கண்காணித்து போக்குவரத்தை சரி செய்தனர். கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

The post விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்தனர் திருச்செந்தூர் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: