கரூர் மாநகராட்சி பகுதியில் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் நடவடிக்கை தேவை

கரூர், மே 27: செல்போன் பேசியபடி வாகனங்கள் ஒட்டும் நிகழ்வுகள் அதிகளவு நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றிலும் திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களுககான பைபாஸ் சாலை செல்கிறது. கரூர் மாநகரில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மாநகரத்திற்குள்ளும் பிரதான சாலைகள் உள்ளன. இந்த சாலைகளிலும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்குபவர்கள் மீது அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் டிராபிக் போலீசார் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், செல்போனை காதில் வைத்து ஒருபுறமாக முகத்தை சாய்த்தவாறு இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவது, கார் போன்ற வாகனஙகளை ஓட்டுபவர்களும், சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் செல்போன் பேசுவதை தவிர்க்காமல் வாகனங்களை ஒட்டிச் செல்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் விபத்துக்கு வழி வகுக்கும் என்பதால்தான், போலீசார், செல்போன் டிரைவிங் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், இதனை கடைபிடிக்காமல் வழக்கம் போல செல்போன் பேசியபடி மிக அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்களால், இவர்களுக்கும், எதிரே வரும் மற்றவர்களுக்கும் ஒருசேர ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இதனை கவனத்தில் கொண்டு செல்போன் பேசியபடி வாகன இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு, இதனை கட்டுப்படுத்திட வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூர் மாநகராட்சி பகுதியில் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Related Stories: