திருவள்ளூர், மே 27:வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் குறுவைப் பருவத்தில் மாற்றுப்பயிர் திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் நோக்கமானது குறுவை, கார், சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் மற்றும் இடுபொருள் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து மிகுந்த உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் குறுகிய கால பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிர் சாகுபடி திறனை அதிகரித்தல் ஆகும்.
சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு தேவையான இடுபொருட்களான விதைகள், 1 சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கான செலவினம், திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஆகியவற்றிற்காக விவசாமிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பயறுவகை சாகுபடி மேற்கொள்வதற்கு தேவையான இடுபொருட்களான விதைகள், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கான செலவினம், திரவ உயிர் உரங்களான ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றிற்காக விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
எண்ணெய் வித்து சாகுபடி மேற்கொள்வதற்கு விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தும், தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
The post குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர் சாகுபடி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.