திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 75 பார்களுக்கு ஒரே நாளில் சீல்: டாஸ்மாக் அதிரடி

சென்னை, மே 24: திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட வந்த, 75 பார்களுக்கு ஓரே நாளில் சீல் வைத்து, டாஸ்மாக் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுக்காக்களில், 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள் தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில், மேற்கண்ட 137 டாஸ்மாக் கடைகளில், 20 கடைகளுக்கு அருகில் மட்டும் ‘பார்’ நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த, ஆக.19ம் தேதி, மீதம் உள்ள கடைகளுக்கு அருகில், ‘பார்’ அமைக்க ஏலம் நடந்தது. இதில், 36 கடைகளுக்கு, ‘பார்’ நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், மீதம் உள்ள கடைகளுக்கு அருகில் அனுமதியில்லாமல் ‘பார்’கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட டோல்கேட் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு அருகில் தனியார் இடத்தில் தகுந்த உரிமமின்றி கடந்த, 6 மாத காலமாக பார் இயங்கி வருகிறது. இதே போல், மாவட்டம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட இடத்தில் அனுமதியின்றி ‘பார்’கள் இயங்கி வருகின்றன. இங்கு, இரவு 10 மணி முதல் மறுநாள் மதியம் 12 மணி வரை மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் சுமார் ₹50 முதல் ₹70 வரை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. கடந்த சில வாரத்திற்கு முன் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் பலியாகினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் இயங்கிய டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பாரில் மது அருந்தி சில மணி நேரத்தில் 2 பேர் இறந்தனர். போலீஸ்சார் நடத்திய விசாரணையில், மதுபானத்தில் சயனைடு விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், அனுமதியின்றி இயங்கிய பாருக்கு டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், திருவள்ளூர் நகரில் அனுமதியின்றி இயங்கி வந்த தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த 3 பார்களுக்கும் அதே நாளில் உரிமம் இல்லாமல் செயல்பட்டதை கண்டறிந்து டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 75 பார்களுக்கும் ஒரே நாளில் அதிரடியாக போலீசார் சீல் வைத்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா அல்லது அனுமதி இல்லாமல் செயல்படுகிறதா என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 75 பார்களுக்கு ஒரே நாளில் சீல்: டாஸ்மாக் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: