திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 95 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 38 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 94 மனுக்களும் என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு ரூ.5,500 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டியும், ஒரு பயனாளிக்கு உலமா பணியாளருக்கான இருசக்கர வாகன மானியத் தொகை பெறுவதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சிபின், துணை கலெக்டர் (பயிற்சி) சுபலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: