காரைக்கால் போலி நகை மோசடி வழக்கில் பெண் தொழிலதிபருக்கு நிபந்தனை ஜாமீன்

 

காரைக்கால், மே 4: காரைக்காலில் போலி நகைகளை அரசு வங்கிகள் மற்றும் தனியார் அடமான கடைகளில் விற்றும், அடமானம் வைத்தும் ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் காரைக்காலை சேர்ந்த ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் புவனேஸ்வரி, அவரது கூட்டாளியும் நண்பருமான மாஜி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் ஜெசிமெண்ட் உள்ளிட்ட 10 பேரை காரைக்கால் போலீசார் கடந்த மாதம் கைது செய்து புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த தொழிலதிபர் புவனேஸ்வரி மற்றும் அவரது நண்பர் ஜெரோம் ஜெசிமெண்ட் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் புவனேஸ்வரி உள்ளிட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த புவனேஸ்வரி, ஜெரோம் ஜெசிெமண்ட் ஆகிய இருவரும் கடந்த இரு நாட்களாக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காரைக்கால் போலி நகை மோசடி வழக்கில் பெண் தொழிலதிபருக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: