விழுப்புரம் அருகே பரபரப்பு 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 5 பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்து, ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி பள்ளி ஆசிரியர், விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த சிறுமி, எங்கள் பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். என்னை போன்று மேலும் 4 சிறுமிகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தனர் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். புகாரின்படி, 4 சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து, ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

The post விழுப்புரம் அருகே பரபரப்பு 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: