கள ஆய்வில் முதல்வர்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அதற்கு ஏற்ப பணிகளை முடக்கி விட்டு உள்ளீர்கள். அதுபோன்று செய்யாமல் அனைத்து பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சில அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து கீழ்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் அனைத்துமே விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆய்விற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றமாக அறிய வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ம. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post கள ஆய்வில் முதல்வர்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: