அதிமுகவை பாஜகவினர் விமர்சித்தால் பதிலடி தருவோம்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவுக்கு வசீகரமும், சரியான தலைமையும் தற்போது இல்லை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுகவினரை பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுகவை விமர்சித்துப் பேசிய எஸ்.ஆர்.சேகரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். எஸ்.ஆர்.சேகரை அண்ணாமலை கண்டிக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையை அதிமுக எடுக்கும். அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம். அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்த பிறகு பாஜக எப்படி அதிமுகவை விமர்சிக்கலாம்?. அமித்ஷா உடனான சந்திப்பை வைத்து அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறு. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்துவதை யாரும் ஏற்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

The post அதிமுகவை பாஜகவினர் விமர்சித்தால் பதிலடி தருவோம்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: