குமரியில் கோடையில் காடுகளில் எரியும் தீயை அணைக்க வனத்துறையினருக்கு சிறப்பு பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது

 

நாகர்கோவில், ஏப்.27: கோடை காலங்களில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. மழை அதிகமாக இருக்கும் சமயங்களில் தீ விபத்து நிகழ்வதில்லை. இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன. இது போன்ற தீ விபத்துகளை தடுக்கும் வகையிலும், தீ விபத்து ஏற்படும் இடங்களில் உடனடியாக அதை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.

பயர் லைன் அமைப்பதற்கான காற்று அடிப்பான் கருவி, புகை தடுப்பு கண்ணாடிகள், தீக்கவச உடைகள், தீ கவச காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக தீயணைப்பு துறை சார்பில், வனத்துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கீரிப்பாறை வன அலுவலகத்தில் வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமையில் நடந்த இந்த பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் துரை, அழகியபாண்டிபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.

The post குமரியில் கோடையில் காடுகளில் எரியும் தீயை அணைக்க வனத்துறையினருக்கு சிறப்பு பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: