ஆலங்குடி அருகே நல்லேர் பூட்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு

ஆலங்குடி, ஏப்.21: ஆலங்குடி அருகே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டி விசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தமிழ் புத்தாண்டான சித்திரை முதல்நாள் தங்களது விவசாய நிலத்தில் நல்லேர் பூட்டி வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி தேங்காய் பழம் தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்பு டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் இந்த தமிழ் புத்தாண்டின் முதல் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர். இக்கிராமத்தைப் பொறுத்தவரையில் அனைத்து விவசாயிகளும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டிய பின்பே மற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்குவது வழக்கமாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் நல்லேர் பூட்டி விளை நிலம் மற்றும் வானத்தை வழிபட்டனர்.

The post ஆலங்குடி அருகே நல்லேர் பூட்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: