டூவீலர்-கார் மோதியதில் 2 குழந்தைகள், தந்தை படுகாயம்

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 28: ஏழாயிரம்பண்ணை அருகே கார் மோதியதில், டூவீலரில் சென்ற 2 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை காயமடைந்தனர். ஏழாயிரம்பண்ணை அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவர் நேற்று முன்தினம் வல்லம்பட்டியில் இருந்து சாத்தூருக்கு தனது குழந்தைகள் வசந்த் மற்றும் வைஷ்ணவி ஆகியோருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது கார், டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் வைரமுத்து மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வைரமுத்து அளித்த புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த ராஜதுரை மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: