ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் அடிப்படை சொத்து வரி விகிதம் 19 சதவீதமாக உள்ளது. இது மாநகராட்சிகள் மற்றும் பிற சிறப்பு நிலை நகராட்சிகள் உள்ள சொத்து வரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள புதிய வரி உயர்வின் மூலம் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட உள்ளது. சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்டக் குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்எல்ஏ தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.  குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: