பால் தட்டுப்பாடு தொடர்பாக தூத்துக்குடி ஆவினில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

தூத்துக்குடி, பிப்.27: தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் தூத்துக்குடியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினசரி 38 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படும். ஆனால் கடந்த ஒரு வாரமாக குறைவாக 28 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வழங்கப்பட்டது.

இதனால் பல பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் காலதாமதமாகவே இறக்குமதி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு பிறகு பால் வினியோகம் நடைபெற்றுள்ளது. இது பொதுமக்களுடைய பெரிய அளவில் அதிருப்தி ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து புகார்களும் வந்தன.

இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த அமைச்சர்கள் பால் விநியோகத்தை பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக உள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் விநியோகம் காலதாமதமானது.

மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் விநியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல். கோடைகாலம் வர உள்ளதால் ஆவினில் கூடுதலான விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன. கலப்படம் இன்றி பால் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. லாபம் மட்டும் நோக்கம் அல்ல. தட்பவெப்பநிலை காரணமாக தற்காலிகமாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் என்றார். ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், ஆவின் மண்டல அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: