தாராபுரம்: தாராபுரம் தென்தாரை 28வது வார்டு சித்ராவுத்தன் பாளையத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் இப்பகுதி குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்டித் தர வேண்டும் என்பது வார்டு மக்களின் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமையில் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், வார்டு கவுன்சிலர் மீனாட்சி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.