காரைக்குடி: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செக்காலை வீதிகள், வாட்டர் டேங்க், சுப்பிரமணியபுரம் பகுதி மற்றும் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மாகாலனி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மரங்களில் அதிக எண்ணிக்கையில் குரங்குகள் முகாமிட்டுள்ளன. இவை அதிரடியாக வீடுகளுக்குள் நுழைந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு, விரட்ட வருபவர்களை கடிக்க வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் பயத்துடனே வீட்டிற்குள் இருக்க வேண்டியநிலை உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து செக்காலை பகுதியை சேர்ந்த மணி என்பவர் கூறுகையில், குரங்குகள் தொல்லையால் வீட்டிற்குள் இருக்கவே பயமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் மொட்டை மாடியில் முகாமிடுகின்றன. இதனால் துணி உலர்த்துவது உள்ளிட்ட காரணங்களுக்கு மாடிக்கு செல்லவே பயமாக உள்ளது. தவிர தண்ணீர் பைப்புகளை திறந்துவிடுவது, வீட்டிற்குள் எங்காவது ஒளிந்து கொள்வது என அட்டகாசம் செய்கின்றன.
